முன்னுரை
    அரபி மாதங்கள் என அழைக்கப்படும் சந்திர  மாதங்களில் 9 வது மாதம் ரமளான் மாதமாகும். இந்த ரமளான் மாதத்திற்கென்று சில   சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் அம்மாதத்தின் முழுமையான பயனை  அடைவதற்காக அதன்  சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.     
  1. திருக்குர்ஆன் அருளப்பட்ட  மாதம்.
      ரமாளான் மாதம் மற்ற மாதங்களைப் போன்று ஒரு  மாதமானாலும், 'அம்மாதத்தில் தான் திருக்குர்ஆன் இறக்கப்பட்டது' என்ற  சிறப்பைப்  பெறுகிறது.
  அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்:       
     ﴿      شَهْرُ رَمَضَانَ الَّذِيْ اُنْزِلَ  فِيْهِ الْقُرْاَنُ هُدًى لِلنَّاسِ  وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ ﴾
        'ரமளான் மாதம்  எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழி காட்டியாகவும்,  தெளிவான  சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை, தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான  அல்குர்ஆன் அருளப்  பெற்றது'. (அல்குர்ஆன் 2 : 185)
  2. நோன்புக்குரிய மாதம்.
      உலகமகா அற்புதமான திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில்  இறக்கப்பட்ட காரணத்திற்காக அந்த ரமளான் மாதத்தில் நோன்பு வைக்க வேண்டும்  என்பது  அல்லாஹ்வின் கட்டளை. இது அதற்குரிய மற்றொரு சிறப்பு.
  அல்லாஹ் சொல்கிறான்:
     ﴿      فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ  فَلْيَصُمْهُ ﴾   
       'ஆகவே எவர்  அம்மாதத்தை அடைந்து கொள்கின்றாரோ அவர் அம்மாதம் (முழுவதும்)  நோன்பு நோற்கட்டும்'. (அல்குர்ஆன் 2 : 185)
    3. சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்.
     إِذَا  جَاءَ رَمَضَانُ فُتِحَتْ اَبْوَابُ اْلجَنَّةِ  
        'ரமளான் மாதம் வந்து  விட்டால் சொர்க்கத்தின் வாயில்கள்  திறக்கப்படுகின்றன'. - நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்:  புகாரி 1898,  முஸ்லிம் 1956)
  மற்றொரு நபிமொழியில்,      
  ..... وَفُتِحَتْ  اَبْوَابُ اْلجَنَّةِ فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ...  
        '..சொர்க்கத்தின் வாயில்கள்  திறக்கப்படுகின்றன, அவற்றின் எந்த வாயிலும் மூடப்படுவதில்லை...' நபிமொழி  (அபூஹுரைரா  (ரலி), திர்மிதி - 618, இப்னுமாஜா 1642)
       முஃமின்களின் ஒரே குறிக்கோள் சொர்க்கத்தை அடைவதாகும், அந்த சொர்க்கத்தின்  வாசல்  கதவுகள் ரமளான் மாதத்தில் தட்டாமலேயே திறக்கப்படுகின்றன.
      அந்த  சொர்க்கத்தில் நுழைவதற்குறிய தகுதியை அடைவதற்கு சிறந்த மாதம் தான் ரமளான்  மாதமாகும்.  
       மொத்தத்தில் சொர்க்கத்தில் நுழைவதற்கு முஃமின்கள் இதன் மூலம்  ஆர்வமூட்டப்படுகிறார்கள். அதாவது சொர்க்க வாசலை திறந்து வைத்து, அதில்  நுழைவதற்குரிய முயற்சியில் ஈடுபடுமாறு அல்லாஹ் முஃமின்களை அழைக்கிறான்.  
       
  4. வானத்தின் வாயில்கள்  திறக்கப்படும் மாதம்.
   إِذَا  دَخَلَ شَهْرُ رَمَضَانَ فُتِحَتْ اَبْوَابُ  السَمَاء .....
          'ரமளான் மாதம் வந்து  விட்டால் வானத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன...' - நபிமொழி.  (அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1899)
       வானத்தின் வாயில்கள் இரண்டே சமயங்களில் தான் திறக்கப்படும். ஒன்று ரமளான்  மாதம்  மற்றொன்று கியாமத்து நாள். அல்லாஹ் சொல்கிறான்:           
     ﴿      وَّ فُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ  اَبْوَابَا ﴾
       'வானம் திறக்கப்பட்டு பல  வாசல்களாக ஆகும'; - (அல்குர்ஆன் 78 : 19)  
      ரமளான்  மாதத்தில் வானவர்களுக்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு இருக்கும்,  ஏனெனில்  அம்மாதத்தில் அவர்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.      
    5. அருளின் வாயில்கள்  திறக்கப்படும் மாதம்.
   إِذَا    كَانَ  رَمَضَانُ فُتِحَتْ اَبْوَابُ  الرَحْمَةِ   .....      
          'ரமளான் மாதம் ஆகிவிட்டால்  அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன'.... - நபிமொழி. (அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி),  நூல்: முஸ்லிம் 1957)
      அருள்  வாயில்கள் திறக்கப்பட்டு மனித சமுதாயத்திற்கு அல்லாஹ் ரமளான் மாதத்தில் மடை  திறந்த  வெள்ளம் போல் அபரிமிதமாக அருள் புரிகிறான். அல்லாஹ்வின் அருளினால் மட்டுமே  சுவர்க்கம் செல்ல முடியும்.      
  6. நரகத்தின் வாயில்கள்  அடைக்கப்படும் மாதம்.
     ...  وَغُلِّقَتْ اَبْوَابُ  الناَّرِ   .....
          '....நரகத்தின் வாயில்கள்  அடைக்கப்படுகின்றன....' - நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்:  முஸ்லிம்  1956)
  மற்றொரு நபிமொழியில்,      
     ...  وَغُلِّقَتْ اَبْوَابُ  الناَّرِ فَلَمْ يُفْتَحْ مِنْهَا  بَابٌ .....
       '...நரகத்தின் வாயில்கள்  மூடப்படுகின்றன, அவற்றின் எந்த வாயிலும் திறக்கப்படுவதில்லை...' நபிமொழி  (அபூஹுரைரா  (ரலி), திர்மிதி - 618, இப்னுமாஜா 1642)  
  7. ஷைத்தான்களுக்கு  விலங்கிடப்படுகின்ற மாதம்.
    وَسُلْسِلَتِ   الشَّيَاطِيْنُ     .....
        '....ஷைத்தான்கள்  சங்கிலியால் விலங்கிடப்படுகின்றனர்'. - நபிமொழி.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1957)      
  8. நல்லதைத் தேடுவோர்  அழைக்கப்படும் மாதம்.
     ...وَيُنَادِيْ مُنَادٍ  يَابَاغِيَ الْخَيْرِ اَقْبِلْ وَيَابَاغِيَ الشَّرِّ اَقْصِرْ     .....
          '...நல்லதைத் தேடுபவனே! முன்னேறிவா! தீமையைத்  தேடுபவனே! (தீமையைக்) குறைத்துக் கொள்!  என்று அழைப்பாளர் ஒருவர் அழைக்கிறார்...' - நபிமொழி (அபூஹுரைரா (ரலி),  திர்மிதி -  618, இப்னுமாஜா 1642)
மற்றொரு அறிவிப்பில் 'ஒரு வானவர் அழைக்கிறார்' என்று வந்துள்ளது.
மற்றொரு அறிவிப்பில் 'ஒரு வானவர் அழைக்கிறார்' என்று வந்துள்ளது.
  9. நரகவாதிகள் விடுதலை அடையும்  மாதம்.
   ...وَلِلَّهِ  عُتَقَاءُ مِنَ النَارِ وَذَلِكَ كُلُّ لَيْلَةٍ     .....
      '...நரகத்திலிருந்து  விடுவிக்கப்படுபவர்கள் பலர் உள்ளனர். (இவ்வாறு  விடுவிப்பது) ஒவ்வொரு இரவிலுமாகும்...' - நபிமொழி (அபூஹுரைரா (ரலி),  திர்மிதி -  618, இப்னுமாஜா 1642)      
  10. லைலத்துல் கத்ர் இரவைக்  கொண்ட மாதம்.
ஆயிரம்  மாதங்களை விட சிறந்த லைலத்துல் கத்ர் எனும் இரவு ரமளான் மாதத்தில் தான்  இருக்கிறது.  
   ...تَحَرُّوْا  لَيْلَةَ الْقَدْرِ فِي الغَسْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ
      '...ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்' என்று  நபி (ஸல்)  அவர்கள் கூறினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  (நூற்கள்: புஹாரி,  முஸ்லிம், திர்மிதி - 722)            
  11. முன் பாவங்கள்  மன்னிக்கப்படும் மாதம்.
   ...مَنْ  صَامَ رَمَضَانَ وَقَامَهُ إيْمَانًا وَاحْتِسَابًا غُفِّرَ لَهُ  مَاتَقَدَّمَ مِنْ  ذَنْبِهِ 
          'நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும்  யார் ரமளானில் நோன்பு நோற்று  வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன'. (நபிமொழி)  (அபூஹுரைரா (ரலி),  திர்மிதி - 619)      
  12. தக்வா  பயிற்சிக்குரிய மாதம்.
தக்வா  எனும் இறையச்சத்தை பெறுவதற்கு சிறந்த பயிற்சியளிக்கும் மாதம். அல்லாஹ்  சொல்கிறான்.  
     ﴿      يَأَيُّهَا الَّذِيْنَ  اَمَنُوْا  كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى  الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ  لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ﴾
           'ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு  முன்னிருந்தோர் மீது கடமையாக்கப்பட்டது போன்று  உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது, அதன் மூலம் நீங்கள் தக்வா  உடையோராகலாம்'.  (அல்குர்ஆன் 2:184)         
  13. அருள் செய்யப்பட்ட மாதம்.     قَدْ  جَاءَكُمْ شَهْرُ مُبَارَكٌ  .....
       'அருள் செய்யப்பட்ட மாதம்  உங்களிடம் வந்து விட்டது....' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பாளர்:  அபூஹுரைரா (ரலி), நூற்கள்: அஹ்மது, நஸயீ, பைஹக்கீ)      
  முடிவுரை
மறுமையின்   நிரந்தர சொர்க்கத்தை அடைந்து கொள்ள, அல்லாஹ்வின் அருள் நிறைந்த ரமளான்  மாதத்தை,  நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நாம் விளங்கிக்  கொள்வோமாக!
