யார் சிறந்தவர்


Image hosted by Photobucket.com

பட்டிணபுரி மன்னன் மருதன் தனக்கு ஒரு புதிய அந்தரங்க ஆலோசகரை நியமித்துக் கொள்ள விரும்பினான்.

அது பற்றி அவன் தன் அமைச்சர் கரியப்பாவிடம் ஆலோசிக்க வந்தான்.

""அரசே! நம் நாட்டில் அரசியல், பொருளியல், நீதித்துறை, ஆட்சித்துறை, எனப் பலதுறைகளில் நன்கு படித்தவர்கள் இருக்கின்றனர். இப்பதவிக்கு அறிவிப்பு செய்தால் அவர்களில் பலர் தங்களைக் காண வருவர். அவர்களுக்குத் தேர்வு நடத்தி நன்கு படித்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க நாம் பாஸ்கர பட்டரின் உதவியை நாடலாம்,'' என்றார்.

நாடெங்கிலும் பறை சாற்றுவித்து அந்தரங்க ஆலோசகர் பதவிக்கு தகுதி உடையவர்கள் குறிப்பிட்ட ஒரு நாளில் தேர்வுக்கு வரலாம் என அறிவித்தார்.

குறிப்பிட்ட நாளில் பல இளைஞர்கள் தேர்வுக்கு வந்தனர். அவர்களுக்கு நடந்த தேர்வில் இரு இளைஞர்கள் முன்னதாக வந்தனர். ஆனால், இருவரும் எல்லா விஷயத்திலும் சமமாக இருந்ததால் அவர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்ய அமைச்சரை அணுகினார் மன்னர்.

""இப்பதவிக்கு வெறும் புத்தகப்படிப்பு இருந்தால் மட்டும் போதாது. சிக்கலான பிரச்னைகளைச் சமாளித்து நல்ல முடிவு காணத் திறமை பெற்றவராக இருக்க வேண்டும். அவர்கள் இருவருக்கு மட்டும் பரீட்சை வைத்து அதில் தேர்ந்தவனைப் பதவிக்கு நியமியுங்கள்,'' என்றார்.

மறுநாள் அமைச்சர் இருவரையும் அழைத்து, ""இன்று காலை என் நண்பரின் உடல் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. அவரது நிலை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்,'' எனக் கூறி விவரிக்கலானார்.

""என் நண்பர் இன்று காலை என்னிடம் கூறியதை அப்படியே கூறுகிறேன். என் நண்பர் வயதானவர்; இதய நோயாளி. ஒரு நாள் இரவு அவர் பயங்கரமான கனவு ஒன்றைக் கண்டார். அந்தக் கனவில் அவர் ஒரு அடர்ந்த காட்டிற்குள் வழி தவறிப் போய் விட்டார். அவர் ஒரு இடத்தில் நான்கு பாதைகள் சேர்வதைக் கண்டார்.

""மங்கிய இரவில் நட்சத்திர ஒளியில் அவர் அவற்றில் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து நடந்து சென்றார். அங்கு சில சிங்கங்கள் திரிந்து கொண்டிருந்தன. அவற்றில் ஒன்று அவரை நோக்கிப் பாய்ந்து வந்தது.

""நண்பர் பயந்து வந்தவழியே ஓடி மறுபடியும் நான்கு பாதைகள் சேரும் இடத்தை அடைந்தார். இரண்டாவது பாதையில் பயமில்லாது நடந்து சென்றார். கொஞ்ச துõரத்தில் ஏதோ வெளிச்சம் இருந்தது கண்டு அங்கு சென்றார்.

""அங்கு பல பாம்புப் புற்றுகள் இருப்பதையும் அவற்றின் மேல் பல பாம்புகள் படமெடுத்து ஆடுவதையும் கண்டார். அவற்றில் ஒன்று ஐந்து தலைநாகம். அவரைக் கண்ட ஐந்து தலைப்பாம்பு சீறவே அவர் பயந்து வந்த
வழியே திரும்பி ஓடி மீண்டும் நான்கு பாதைகள் சேரும் இடத்தை அடைந்தார்.

""பிறகு அவர் மூன்றாவது பாதையில் நடந்து செல்லலானார். கொஞ்ச துõரம் சென்றதும் அது ஒரு மலை அடிவாரத்தில் போய் முடிந்தது. அங்கு பல மனித எலும்பு கூடுகள் இருப்பதைக் கண்டு மலைத்து நின்றார். அப்போது அந்த மலையில் ஒரு குகையிலிருந்து பயங்கர ராட்சஸன் ஒருவன் உறுமிக் கொண்டிருப்பதை கண்ட என் நண்பர் பயந்து வந்த வழியே திரும்பி ஓடி மறுபடியும் நான்கு பாதைகள் கூடும் இடத்தை அடைந்தார்.

""இம்முறை அவர் நான்காவது பாதையில் சென்றார். அவர் கொஞ்ச துõரம் சென்றதும் தன் பின்னால் ராட்சஸன் வருவது கண்டு பயந்து வேகமாக ஓடினார். அவர் ஒரு பாறையின் விளிம்பை அடைந்து விட்டார். அங்கிருந்து போக வழியில்லை. பாறையின் கீழ்வெகு ஆழத்தில் தான் நிலப்பரப்பு தெரிந்தது. அவர் ராட்சஸனுக்கு பயந்து நின்ற போது கால்கள் நடுங்க பாறையிலிருந்து தவறி கீழே படுபாதாளப் பள்ளத்தில் விழுந்து விட்டார்.

அமைச்சர் தம் நண்பர் கண்ட இந்தக் கனவைக் கூறி, ""பார்த்தீர்களா எவ்வளவு பயங்கரமான கனவு என்று! இதய நோயாளியான என் நண்பர் இந்தக் கனவைக் கண்டு முடித்ததும் கண் விழித்தார். மறுவினாடியே அவரது இதயத்துடிப்பு நின்றது. அவர் இறந்து போய்விட்டார்,'' என்றார்.

அப்போது இருவரில் ஒருவர் பயந்து போய் மெதுவாய்த் தாழ்ந்த குரலில், ""கனவில் காணும் காட்சிகள் கூட மனிதனின் உடல் நலனை பாதிக்கின்றன. தங்களது நண்பர் நான்கு முறைகளில் பயந்து ஓடி இருக்கிறார். அந்தப் பயம் அவரைப் பெரிதும் பாதித்திருக்கிறது. கண் விழித்ததும் இதய நோயாளியான அவர் பயத்தால் இதயம் தாக்கப்பட்டு உயிரை இழந்திருக்க வேண்டும். உங்களது நண்பரின் பிரிவால் உங்களுக்குப் பெரும் துயரமே ஏற்பட்டுள்ளது,'' என்றான்.

அதைக் கேட்ட பின் அமைச்சர் மற்றவரை பார்க்கவே அவர் சிரித்தவாறே, ""ஆகா! என்ன அருமையான கட்டுக்கதை,'' என்றான்.

அமைச்சரும், ""கட்டுக்கதையா? ஏன் அப்படிக் கூறுகிறாய்?'' என்று சற்று கோபப்பட்டவர் போலக் கேட்டார்.

""தங்கள் நண்பர் இந்த பயங்கரக் கனவைக் கண்டதும் உடனே கண் விழித்தார் என்றும் மறுவினாடியே அவரது இதயத்துடிப்பு நிற்கவே அவர் இறந்துவிட்டார் என்று கூறினீர்கள். நீங்களோ உங்கள் நண்பரே இந்தக் கனவை உங்களிடம் கூறியதாகச் சொன்னீர்கள் அது எப்படி முடியும்? அவர் தான் கனவைக் கண்டு கண் விழித்ததும் இறந்து போய்விட்டாரே. அதனால் அவர் எப்படி இந்தக் கனவைத் தாமே உங்களிடம் சொல்லி இருக்க முடியும். முடியவே முடியாது. அதனால்தான் இது கட்டுக்கதை என்றேன்,'' என்றான்.

அமைச்சர் இரண்டாவது நபரை பாராட்டி அவனையேமன்னனின் அந்தரங்க ஆலோசகனாகத் தேர்ந்தெடுத்தார்.